Friday 29 June 2012

பாத்திரம்

நான் அன்பைத் 
தருவதற்க்கென ஒரு  அட்சய பாத்திரத்தையும், 
பெருவதற்க்கென ஒரு ஓட்டைப் பாத்திரத்தையும் வைத்திருக்கிறேன். 
சாதாரண கண்களுக்கு, என்றுமே இவை தீர்வதோ, நிறைவதோ இல்லை.

Wednesday 27 June 2012

மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி

ஒன்பது நாட்கள் விடுப்பிற்குப் பிறகு, நேற்று தான் அலுவலகத்திற்கு வந்து பணிகளைத் துவக்கினேன். கடைசியாக, அதிக நாட்கள், நான் விரும்பி(!) விடுப்பெடுத்தது, என் திருமணத்தின் போது தான், மூன்று வாரங்கள். எங்க பொன்ப்ரியா பிறந்த போது கூட ஐந்து நாட்கள் தான் விடுப்பெடுத்தேன் (சனி, ஞாயிறு உட்பட). அப்பொழுது, நான் பணி புரிந்து கொண்டிருந்த அலுவலகத்தில், வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி இல்லை. தற்போதைய அலுவலகத்தில், அந்த வசதி உண்டு. இருந்தும் எனக்கு அது சரிப்படவில்லை.

சென்ற வாரம் முழுவதும், மதுரை மற்றும் அதன் சுற்று வாட்டர ஊர்களுக்கு செல்ல நேர்ந்தது. பொதுவாக, நான் மதுரைக்கு விடுமுறைக்குச் சென்றால், வீட்டை விட்டு எங்கும் செல்வது இல்லை. அதனால் தானோ, என்னவோ, எனக்கு ஊருக்கு செல்வதில் பெரிய ஆர்வம் இல்லை. இதுவும் கூட, நான் அடிக்கடி விடுப்பு எடுக்காததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த விடுமுறை அப்படி ஒரு சாதாரணமான அனுபவம் இல்லை.

சூன் 19, நாகர்கோவிலில் உள்ள, என் மனைவி மீனாவின் தோழிகளில் இருவரை சந்திப்பதற்காக, குடும்பத்துடன் சென்றோம். பெரிதாக ஊர் சுற்றவில்லை.இருந்தாலும், அவர்களுடன் தங்கியருந்த இரண்டு தினங்களும் மகிழ்ச்சியாகவே கழிந்தது.

சூன் 21, நண்பர் முத்துக்கண்ணன் - சுபத்ரா அவர்களின் திருமணத்திற்க்காக தூத்துக்குடிக்குச் சென்றிருந்தேன். என் குடும்பத்தாரை, நாகர்கோவிலில் இருக்க வைத்துவிட்டு, நான் மட்டும் தனியாகவே சென்றேன். நீண்ட நாட்களுக்கு பிறகு யாரோட கையையும் பிடித்துக்கொண்டு நடக்காமல், நானாக சில மணி நேரங்கள் இருக்க வாய்ப்பு கிடைத்தது.

நண்பர் முத்துக்கண்ணனை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். அதற்க்கு மேலும் அங்கு நண்பர் கணேஷ் அவரையும், திரு. செந்தில் அவர்களையும் சந்திக்க முடிந்தது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும், அவரோடு நாகர்கோவில் வரை பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுடன் கேட்டது, பேசியது பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன். இதை முடிப்பதற்கே எனக்கு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

இந்த வாரம் திங்கள் கிழமை, நீண்ட விடுமுறைக்குப்பிறகு மீண்டும் பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவனைப் போல அழுதுகொண்டே அலுவலகம் வந்தேன்.

Monday 11 June 2012

நான்


நான் முரண்பாடுகளின் பிணைப்பாக இருக்கிறேன். ஒரு விசயத்தில் உள்ள நல்லதைப் பார்ப்பதை விட அதனால் விளையும் கேடுகளையே அதிகம் பார்க்கிறேன். நான் எரிச்சலின் உச்சியில் இருக்கிறேன். நான் ஒரு உருப்படாதவன். எனக்கு வாழத் தெரியாது, சாகவும் தெரியாது. எங்காவது ஓடி விடலாம் என்றால், குடும்பம் என்ன ஆகுமோ என்ற யோசனை. இங்கேயே இருக்கலாம் என்றால் நான் என்ன ஆவேனோ என்ற யோசனை.  

மனிதர்களுடன் பழகுவதே வேண்டாம் என்கிறது என் மூளை. இது சாத்தியம் இல்லை என்று சொல்கிறது என் மூளை. என் மூளையை எனக்குப் பிடிக்க வில்லை. சிந்தனை இல்லா மூளை இருந்தால் நன்றா இருக்குமோ? தெரியவில்லை. தீய பழக்கங்கள் என்று  அனைவராலும்   அழைக்கப்படும்  ஏதேனும் ஒன்றை பழகிக்கொள்ள வேண்டுமோ?  அது தரும் விசயங்களை சந்தோசம் என்று நினைத்து லயித்து கிடக்க வேண்டுமோ?

எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று யோசிக்க முடியவில்லை. எதுவுமே பிடிக்காதது போல இருக்கிறது, ஆனாலும் சில விசயங்களை கூர்ந்து பார்த்தால் அதில் உள்ள ஏதோ ஒன்று பிடிப்பது போலவும் இருக்கிறது. சாப்பிடுவது படிக்கும், முப்பது வருடமாக இதைத்தானே செய்கிறாய் என்ற எண்ணம் சாப்பாட்டை வெறுக்கச் செய்கிறது. என் குழந்தையை எனக்கு பிடிக்கும், இந்த குழந்தையை வளர்ப்பதற்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், எந்த மாதிரி ஒரு உலகில் இந்த குழந்தையை கொண்டு வரப்போகிறோம், என்ற எண்ணம் குழந்தையின் மகிழ்ச்சியை காணாமல் போய்விட செய்கிறது. 

நான் விதிகளை மதித்து நடக்கும் போது, அதன் விளைவுகளால் ஏற்படும் பதிப்பும், மற்றவர் விதிகளை மதித்து நடக்கும் போது, அவர்களின் நேர்மையும் எனக்கு தெரிகிறது. இவை எல்லாம் எனக்கு தெரிந்த போதும் என்னால் மாற்ற முடியவில்லை. இரவில், தனிமையில் அமர்ந்து வானத்தைப் பார்க்கும் போது, இந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு மிகச்சிறிய பூச்சி என்றே தோன்றுகிறது. இந்த பூச்சிக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமை, இந்த பிரபஞ்சத்தையே தன் தலையில் சுமப்பதைப்போல. எனக்கு மனநிலை சரி இல்லை, நான் எந்த விதிகளையும் மீறாத காரணத்தால், ஒரு கட்டுப்பாட்டில் உள்ள மன நிலை தவறியவனாகவே இருக்கிறேன். நான் கட்டுப்பாட்டை இழக்க வேண்டுமோ? என் மனம் சொல்லும் வழியில் செல்ல வேண்டுமோ? என் மனம், அது ஒரு ....

நான் நினைவுகளை இழந்தால், ஒரு நாள் நிம்மதியாக உறங்கலாம்.