Thursday 31 May 2012

15,30,40

நான் பெரிய புத்திசாலி இல்ல. ஆனாலும், என் சிந்தனையின் வீச்சை, என் எழுத்தில் கொண்டு வர முடியவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு சிந்தனை, அதன் மேல் மற்றொன்று, என்று எனது எண்ணம் பறக்கும். ஆனால், எழுதும் போதோ  ஒவ்வொரு வார்த்தையையும் முடிக்கும் முன், பல முறை அதே விசயத்தை யோசித்து, முன்னும் பின்னும் சரியாக உள்ளதா என்று பார்த்து,  மிகவும்  சிரமமாக உள்ளது. 
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு கட்டுரையாக எழுத வேண்டிய "வாழ்க்கை"  பதிவை "கேள்வி - பதில்" வடிவில் வைத்ததன் முக்கியமான காரணம் இதுவே. 
மேலும் ஒரு விசயத்தை, ஒரு முறை யோசித்த  பின், அதை பதிவு  செய்ய  வேண்டும்  என்கிற  எண்ணம் வருவதில்லை. 
என்ன தான் நியாயமான  பல காரணங்கள் சொன்னாலும், உண்மையில், ஒரு சோம்பேறித்தனமே மேலோங்கி இருக்கிறது. அதனால் ஒவ்வொரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு பதிவிட வேண்டும் என்று இதை ஆரம்பிக்கிறேன். 
15-30-40
இரண்டு நாட்களுக்கு முன்பு, தற்செயலாக டென்னிஸ் பார்க்க நேர்ந்தது. இதற்க்கு முன்னும் டென்னிஸ் மேட்ச் பார்த்திருக்கிறேன், இருந்தாலும் திடீரென்று ஒரு கேள்வி. ஏன் இவர்கள் 15-30-40 என்று புள்ளிகள் கொடுக்கிறார்கள்? 1-2-3 என்று கொடுக்கலாமே?
இதற்கான பதிலை இங்கு சென்று அறிந்து கொண்டேன். சரி ஆரம்பம் தான் அப்படி பயன்படுத்தினார்கள், இப்போது ஏன்? அனாவசியமாக ஒரு எழுத்தில் முடிக்க வேண்டிய விசயத்தை இரண்டு எழுத்தில் காட்டுகிறார்கள். எந்த ஒரு விசயமும், வாழைப்பழத்தில் பத்தியை நிக்க வைத்து வழிபாடு செய்வது மாதிரி மிக மிக சிறிய விசயமாகவே இருந்தாலும் கூட, மாற்றுவதற்கு ஒரு தைரியம் தேவைப்படுகிறது.